.

.

Sunday, November 30, 2014

கத்தி பட வழக்கில் ஐகோர்ட் விளாசல்: திரைப்படங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினால் அரசு பாதுகாப்பு வழங்கவேண்டும்!!!

30th of November 2014
சென்னை:நடிகர் விஜய் நடித்த, 'கத்தி' படத்தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை, படத்திலும், விளம்பரங்களிலும் வைத்துக் கொள்ள, பாதுகாப்பு வழங்கும்படி, அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, தி.நகரில் உள்ள, லைகா தயாரிப்பு நிறுவனம், 'கத்தி' படத்தை தயாரித்தது. நடிகர் விஜய் நடித்த இந்தப் படத்தை, வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்தன. 'இலங்கை அதிபர் ராஜபக் ஷேவுக்கு நெருக்கமானவர்களால், லைகா தயாரிப்பு நிறுவனம் நடத்தப்படுகிறது; 'கத்தி' படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம்' என, சில அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

கடந்த மாதம், 20ம் தேதி, இரண்டு சினிமா தியேட்டர்கள் தாக்குதலுக்கு ஆளாகின. இதையடுத்து, படத்தின் பிரின்ட்களிலும், விளம்பரங்களிலும், 'லைகா' பெயரை பயன்படுத்த மாட்டோம் என, நிறுவனம் சார்பில், கடிதம் அளிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, படமும் வெளியானது. இந்நிலையில், கடந்த, 7ம் தேதி, உள்துறை செயலருக்கும், டி.ஜி.பி.,க்கும், லைகா நிறுவனம் சார்பில், மனு அளிக்கப்பட்டது. போதிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அப்போது தான், நிறுவனத்தின் பெயரை, படத்திலும், விளம்பரத்திலும் வெளியிட முடியும் என, மனுவில் கூறப்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு வழங்க கோரி, உயர் நீதிமன்றத்திலும், லைகா தயாரிப்பு நிறுவனம், மனுத் தாக்கல் செய்தது.

மனுவை, நீதிபதி ராமசுப்ரமணியன் விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆஜரானார். நீதிபதி ராமசுப்ரமணியன் பிறப்பித்த உத்தரவு: ஒரு கட்சியின் தலைவருக்கு, மனுதாரர் தரப்பில் அளிக்கப்பட்ட கடிதத்தில், 'நியாயமான கோரிக்கையை ஏற்கிறோம்; உணர்வுகளை மதிக்கிறோம்; படம் மற்றும் விளம்பரங்களில் இருந்து, நிறுவனத்தின் பெயரை நீக்க, ஒப்புக் கொள்கிறோம்' என, கூறப்பட்டுள்ளது.

இதுபோன்ற கடிதங்களுக்கு, முக்கியத்துவம் அளிக்க முடியாது. ஒரு படத்தை திரையிட, சென்சார் போர்டு சான்று அளித்து விட்டால், மதம், ஜாதி, இனம், மொழி உணர்வுகளை காரணம் காட்டி, மீண்டும் தணிக்கை செய்ய, எந்த அமைப்பும் கோர முடியாது.

படத்தை வெளியிட சான்றளிக்கப்பட்ட பின், வசனம், காட்சிகள், தலைப்புகளை நீக்கும்படி கோருகிற அமைப்புகளின் நடவடிக்கையானது, 'பிளாக்மெயில்' போன்றதாகும். இத்தகைய மிரட்டல், வெற்றி பெற, அரசு அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு வெற்றி பெற அனுமதித்தால், சகிப்புதன்மை இல்லாத சிலரிடம், ஆட்சி அதிகாரத்தையும், சட்டத்தின் ஆட்சியையும், சரண்டர் செய்வதற்கு வழிவகுத்து விடும்.

இலங்கை அதிபருக்கு நெருக்கமானவர்கள் என, படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்த அமைப்புகள், அந்த படத்தின் மூலம், அந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு வருமானம் கிடைப்பதை எதிர்க்கவில்லை.

படத்தை மக்கள் பார்ப்பதற்கும், அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. படத்தின் மூலம் அதிக வசூலாகி உள்ளது என, பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. அதன் மூலம், படத்துக்கு, சென்சார் போர்டு அல்லது மக்கள் தரப்பில், எந்த எதிர்ப்பும் இல்லை என்பதை காட்டுகிறது.
எந்த அமைப்பிடம், மனுதாரர் தரப்பில் கடிதம் அளிக்கப்பட்டதோ, படத்தை நிராகரிக்கும்படி தமிழக மக்களை, அந்த அமைப்பால் கேட்க முடியவில்லை. தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை அகற்றியதால், அந்த அமைப்பும் சந்தோஷப்பட்டு கொண்டது.

எனவே, கொள்கை அடிப்படையில், எதிர்ப்பு இல்லை. தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை, படத்திலும், விளம்பரத்திலும் வெளியிட ஏதுவாக, மனுதாரருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். யாராவது அச்சுறுத்தலை ஏற்படுத்தினால், அவர்கள் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்கலாம்’’என்று உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment