சென்னை:தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான பாகுபலி படத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடித்துள்ளார்கள். ராஜமெளலி இயக்கியுள்ளார். வசூலில் நாளுக்கு நாள் ஆச்சரியப்படுத்தும் இந்தப் படம், இப்போது இரு புதிய சாதனைகளைச் செய்துள்ளது.
முதல் 2 நாள்களில் 100 கோடி வசூலைத் தொட்டு தனது சாதனையை ஆரம்பித்த பாகுபலி, அடுத்ததாக 5 நாள்களில், 200 கோடி ரூபாய் வசூலை அள்ளிய முதல் படம் என்கிற அடுத்தச் சாதனையை நிகழ்த்தியது. அதன்பின்னர், முதல் 10 நாளில் 355 கோடி ரூபாயை வசூலித்த படம் என்கிற நம்பமுடியாத சாதனையையும் செய்தது. அதுவரை எந்த ஒரு இந்திய சினிமாவும் முதல் 10 நாள்களில் 350 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியதில்லை. இதற்கு முன்பு அமீர் கானின் பிகே படத்துக்கு, 300 கோடியைத் தொட 17 நாள்கள் ஆயின.
இப்போது புதிதாக இரு சாதனைகள்.
ஹிந்தியில் டப் செய்யப்பட்ட பாகுபலி, யாரும் எதிர்பார்க்காத வசூலைப் பெற்றுள்ளது. முதல் 5 நாளில் ரூ. 35 கோடியைத் தொட்டபோது 100 கோடி வசூலைப் பெறுமா என்கிற கேள்வி எழுந்தது. அது இப்போது உண்மையிலேயே சாத்தியமாகியுள்ளது.
ஹிந்தியில் டப் செய்யப்பட்ட படங்களில் அதிக வசூலான படம் என்கிற புதிய சாதனையைப் படைத்துள்ளது பாகுபலி. இதற்கு முன்னர் எந்திரன் தான் இந்தப் பிரிவில் முதலிடத்தில் இருந்தது. ஞாயிற்றுக்கிழமை கிடைத்த வசூலோடு இதுவரை ஹிந்தி பாகுபலி மட்டும் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது. இதன் இன்னொரு சாதனைதான் உச்சபட்சம்!
No comments:
Post a Comment